பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃப்-க்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
உலக நாடுகள் பலவும் கரோனா தொற்றால் பெரும் பாதிப்பை அடைந்துள்ளன. பாகிஸ்தானில் ஒருநாள் பாதிப்பு சராசரியாக 4,000 முதல் 5,000 வரையில் இருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீஃப்புக்கு கரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வியாழக்கிழமை காலை பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஷெபாஸ் ஷெரீஃப் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பணமோசடி வழக்கு ஒன்றில், அந்நாட்டு தேசிய அமைப்பு ஷெபாஸ் ஷெரீஃபை விசாரணைக்கு ஆஜராகும்படி கூறவே, அவர் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஷெரீஃப் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் பாகிஸ்தான் இம்ரான் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஷெரீப் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.