இலங்கையில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச கடந்த மார்ச் 2-ஆம் தேதி அந்த நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதையடுத்து, ஏப்ரல் 25-ஆம் தேதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 20-ஆம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் அனுமதியளித்ததையடுத்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இலங்கையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஏறத்தாழ 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 11 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு ஆகஸ்ட் 1 முதல் அனுமதியளிக்கப்படுகிறது.