உலக நோய்த் தொற்றுத் தடுப்புக்கு ஆதரவளிக்கும் சீனத் தொழில் நிறுவனங்கள் என்ற தலைப்பில் அமெரிக்காவின் கூட்டுச் செய்தி நிறுவனம் அண்மையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
கொவைட்-19 நோய்த் தொற்றுத் தடுப்பில், உலகின் பல பத்து நாடுகளுக்கு 10 கோடி டாலருக்கும் மேலான மருத்துவச் சிகிச்சைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தை சீனத் தொழில் நிறுவனங்கள் நன்கொடையாக வழங்கியுள்ளன. அலிபாபா குழுமத்தை நிறுவிய ஜாக் மா ஏப்ரலில் நியூயார்க்கிடம் ஒப்படைக்கப்பட்ட 1000 சுவாச இயந்திரங்களின் கட்டணத்தைக் கட்டினார். அவரது பெயரிலான பொது நல நிதியம் ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, ஆசியா ஆகியவற்றுக்கும் பாதுகாப்புப் பொருட்களை வழங்கியுள்ளது. மேலும், டிக் டாக், டென்சென்ட், ஹுவாவெய், ஜேடி, லெனோவா, பிஒய்டி உள்ளிட்ட நிறுவனங்களும் பல நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பல்வேறு உதவிப் பொருட்களை வழங்கியுள்ளன என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கென்னடி அரசுப் பள்ளியின் ஆஷ் மையத்தில் சீனாவின் அறக்கொடை பற்றி ஆய்வு செய்யும் ஏட்வார்ட் கான்னிங்கம் கூறுகையில், சீனாவின் அறக்கொடை லட்சியம் சீனப் பொருளாதாரத்தின் விறுவிறுப்பான வளர்ச்சியுடன் முன்னேறி வருகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் சீனா, கொவைட்-19 நோய்த் தடுப்பில் சீனாவின் செயல்கள் என்ற வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதில், நோய் தொற்றால் சீனா கடுமையாக பாதிக்கப்பட்ட போது சர்வதேசச் சமூகம் சீனாவுக்கு மதிப்புமிக்க ஆதரவு மற்றும் உதவியை வழங்கியது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதோடு, மற்றவரின் உதவிக்கு நன்றியுணர்வுமிக்க சீனா எப்போதுமே இயன்ற அளவில் சர்வதேசச் சமூகத்தின் நோய் தொற்றுத் தடுப்புக்கு ஆதரவளித்து வருகிறது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்