அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 425 பேர் பலியாகியுள்ளனர்.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 425 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 1,20,384 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 23,88,153 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 10,02,929 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.