லாஸ் ஏஞ்சல்ஸ் : கரோனா போலொரு நோய்த்தொற்று உருவாகும் என்று மறைந்த பாப் இசை சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் அப்போதே எச்சரித்ததாக அவரது முன்னாள் பாதுகாவலர் கூறியுள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 539 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்து பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கவைப் பொறுத்தவரை இதுவரை பேர் 784 பலியாகியுள்ளனர். அத்துடன் 54,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா போலொரு நோய்த்தொற்று உருவாகும் என்று மறைந்த பாப் இசை சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் அப்போதே எச்சரித்ததாக அவரது முன்னாள் பாதுகாவலர் மேட் பிட்ஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தி இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
இதுபோலொரு இயற்கைப்பேரழிவு காத்திருக்கிறது என்பதை அவர் எப்போதுமே உணர்ந்திருந்தார். நாம் எப்போது வேண்டுமானலும் இந்த உலகத்தில் இருந்து துடைத்து எறியப்படுவோம் என்பதை அவர் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார். அது ஒரு கிருமி மூலமாகத்தான் உலகம் முழுவதும் பரவும் என்பதையும் அவர் கூறுவார். அதற்காகவே மற்றவர்கள் அவரைக் கிண்டல் செய்தாலும் அவர் எப்போதும் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து வந்தார்.
அவர் வாழ்ந்த காலத்தில் இதுதொடர்பாக அவர் ஏதாவது கூறினாலும் யாரும் அவரை முழுவதுமாக நம்பி ஏற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் உலகம் முழுவதும் அறியப்பட்ட சூப்பர் ஸ்டாராக இருந்தால் நீங்கள் புத்திசாலியாக இருக்கக் கூடாதா? நான் அறிந்தவரை அவர் வெகு புத்திசாலியான மனிதர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். .