தோல்வியை ஒப்புக்கொள்ள டிரம்ப் மறுத்து வரும் நிலையில், நிர்வாக மாற்றத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அமெரிக்க அதிபர் (தேர்வு) ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தெலவார் மாகாணத்திலுள்ள வில்மிங்டன் பகுதியில் பேசிய ஜோ பைடன், ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
குடியரசுக் கட்சியினர் தங்களது வெற்றியை ஏற்க மறுக்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய ஜோ பைடன், இது எங்கள் திட்டத்திலும், ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பிலும் எந்தவித விளைவுகளையும் ஏற்படுத்தப்போவதில்லை என்று கூறினார்.
சில மாகாண தேர்தல் முடிவுகளுக்கு அதிபர் டெனால்ட் டிரம்ப்பின் குழுவினர் சட்ட ரீதியான சிக்கல்களை அளித்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், பொதுத்தேர்தலில் கூட்டாட்சி பொதுசேவை நிர்வாகத்தின் நிர்வாகி வெற்றிகரமான வேட்பாளரை வெளிப்படையாக அறிவிக்காதவரை முறையான நிர்வாக மாற்றப் பணிகளைத் தொடங்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.
பைடனை அதிகாரப்பூர்வ வெற்றியாளராக நியமிப்பதிலும், ஜனநாயகக் கட்சியினர் நிர்வாக மாற்றத்திற்குத் தேவையான கூட்டாட்சி நிதியைத் தருவதிலும் கூட்டாட்சி பொதுசேவை நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது.
இதுகுறித்து பேசிய பைடன், கூட்டாட்சியின் நிதி பயனுள்ளதாக இருக்கும், ஆனால் பணிகளைத் தொடருவதற்கு எனது நிர்வாகக் குழுவினருக்கு கூட்டாட்சியின் நிதி தேவையில்லை என்று கூறினார்.
அமெரிக்காவின் ஜனநாயக நிறுவனங்கள் மீண்டும் வலுவாகவும், வளமானதாகவும் மாறும். வெளிநாட்டு தலைவர்களுடனான கலந்துரையாடலில் இந்த நம்பிக்கை பிறந்துள்ளது என்று தெரிவித்தார்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், டிரம்ப்புடன் நேரில் பேசும் தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.