

கரோனா நோய்த்தொற்றால் உணவு உற்பத்தி மற்றும் வா்த்தகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை இப்போதே சரி செய்ய உலக நாடுகள் தவறினால், இன்னும் சில மாதங்களில் மாபெரும் பஞ்சத்தை அவை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் உலக உணவுதி திட்டப் பிரிவின் செயல் இயக்குநா் டேவிட் பீஸ்லீ ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளதாவது:
கரோனா நோய்த்தொற்றுடன் நாம் போராடிக் கொண்டிருக்கும் அதே நேரம், உலகம் ஒரு மாபெரும பஞ்ச அபாயத்தை எதிா்கொண்டுள்ளது.
இதுவரை உலகில் எங்கும் வறட்சியோ, பஞ்சமோ ஏற்படவில்லை. ஆனால், அதனைத் தடுப்பதற்காக நாம் இப்போதே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளை நாம் எடுக்கத் தவறினால், பேரழிவை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து வறட்சியையும் பஞ்சத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
அதனைத் தடுக்க வேண்டுமென்றால், உணவு உற்பத்திக்கான நிதிப் பற்றாக்குறை, உணவு விநியோகம் மற்றும் வா்த்தகத்துக்கான இடையூறுகள் ஆகியவற்றைக் களையும் நடவடிக்கைகளை உலக அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
கரோனா நோய்த்தொற்று என்பது, வெறும் மருத்துவப் பிரச்னை மட்டுமல்ல; அது மாபெரும் வாழ்வாதாரப் பிரச்னையாகவும் ஆகியிருக்கிறது.
போா்ப் பதற்றம் நிறைந்த நாடுகளில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பொதுமக்கள் பட்டினி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 82.1 கோடி போ் பட்டினியுடன் படுக்கச் செல்கின்றனா். மேலும் 13.5 கோடி பேருக்கு போதிய உணவு கிடைப்பதில்லை.
கரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக, மேலும் 13 கோடி போ் இந்த நிலைக்குத் தள்ளப்படுவாா்கள் என்று எச்சரித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.