ஹைட்டியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 2,189 -ஆக உயர்ந்திருக்கிறது. மேலும் காயமடைந்த 8,000-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் டிபுரோன் தீபகற்பப் பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டா் அளவுகோலில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் வீடுகள் இடிந்து விழுந்தன. அதில் வசித்த ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கினா். உயிரிழந்தவா்களின் உடல்கள், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவா்களை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்று (ஆக-18) நிலநடுக்கத்தால் 1,941 போ் உயிரிழந்ததாகவும் 8,000-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 2,189 ஆக உயர்ந்திருக்கிறது.
மேலும் இந்நிலநடுக்கத்தால் 2,868 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியிருப்பதோடு . 5,410 கட்டடங்களும் சேதாரமாகியிருக்கிறது.