ஜோஹன்னஸ்பர்க்: தென்னாப்ரிக்காவுக்கு குடும்பத்துடனோ அல்லது பணி நிமித்தமாகவோ சென்றிருந்தவர்கள், திடீரென வெளியான விமான சேவைகள் ரத்து அறிவிப்பினால் நாடு திரும்ப முடியாமல் செய்வதறியாது தவித்து வருகிறார்கள்.
பல அடுக்கு உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரிட்டன் கடந்த வியாழக்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், வெள்ளிக்கிழமை மதியம் முதல் தென்னாப்ரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து விமானச் சேவையை ரத்து செய்வதாகத் தெரிவித்திருந்தது.
இத்தாலி மற்றும் அமெரிக்காவும் தென்னாப்ரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுபோல, கனடா உள்ளிட்ட நாடுகளும் சில புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளன.
இதுபோல, பல நாடுகள், தென்னாப்ரிக்காவிலிருந்து விமான சேவையை ரத்து செய்திருப்பதால், குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தவர்களும், பணி நிமித்தமாக தென்னாப்ரிக்கா சென்றவர்களும், சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சில நாடுகள், தங்கள் நாட்டு மக்களை மட்டும் நாட்டுக்குள் அனுமதிக்கவும், குறிப்பிட்ட கால தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளையும் பிறப்பித்துள்ளது.
இதுபோல இந்தியாவிலும், தென்னாப்ரிக்கா உள்ளிட்ட 3 நாடுகள் அதிக அபாயம் கொண்ட நாடுகள் பட்டியலில் சுகாதாரத் துறை வைத்துள்ளது.