முக்கியத்துவம் வாய்ந்த 1500 சூழலியல் பகுதிகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசு தவறி விட்டதாக இயற்கைக்காக உலகளாவிய நிதியம் தெரிவித்துள்ளது.
உலகில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பாதுகாக்க பல்வேறு சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் சூழலியல் பாதுகாப்பு தொடர்பாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. இதில் ஆஸ்திரேலிய அரசானது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைக் காக்கத் தவறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மொத்தம் உள்ள 6,001 சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பில் 1542 பகுதிகளும், 920 சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடற்பரப்பில் 115 பகுதிகளும் பாதுகாக்கபடாமல் உள்ளது தெரியவந்துள்ளது.
இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் வரையறைகளின்படி ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் 2218 பகுதிகளும், கடற்பரப்பில் 199 பகுதிகளும் மட்டுமே குறைந்தபட்ச பாதுகாப்பில் உள்ளது.
இதையும் படிக்க | நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 22 பேர் பலி
அபாயகரமான சூழலில் உள்ள 84 சூழலியல் பகுதிகளில் 13 பகுதிகள் மட்டுமே குறைந்தபட்ச பாதுகாப்பில் பராமரிக்கப்படுவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல் ஆபத்தான பட்டியலிடப்பட்ட 1,937 உயிரினங்களின் பட்டியலில் 129 உயிரினங்கள் எத்தகைய பாதுகாப்புக்கும் உட்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"ஆஸ்திரேலியா ஒரு வளமான நாடாக இருந்தபோதிலும் காலநிலை தொடர்பான சர்வதேச இலக்கை அடைய போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருந்ததின் தோல்வியையே இது காட்டுகிறது” என இயற்கைக்கான உலகளாவிய நிதியம் தெரிவித்துள்ளது.