ஆப்கானிஸ்தான் காபூலில் கார்டே பர்வான் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆப்கன் வாழ் இந்தியர் ஒருவர் நேற்று இரவு துப்பாக்கி முனையில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக அகாலி தள கட்சியின் மூத்த தலைவர் மஞ்சிந்தர் சிர்சா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக கமிட்டி தலைவரான சிர்சா இதுகுறித்து கூறுகையில், "ஆப்கன் தலைநகரில் உள்ள இந்து, சீக்கிய மதத்தை சேர்ந்த குடும்பத்தினரிடம் பேசினேன். கடத்தப்பட்டுள்ள உள்ளூர் வணிகரான பன்சூரி லால் குடும்பத்தினரிடமும் பேசியுள்ளேன். தங்களின் பாதுகாப்பு குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர்.
நேற்று இரவு காபூலில் கிடங்குக்கு செல்லும்போது, 50 வயது மதிக்கத்தக்க பன்சூரி லால் கடத்தப்பட்டார். ஐந்து நபர்கள் அவரை கட்டாயப்படுத்தி காரில் அழைத்து சென்றனர். அவரது சகோதரர்களும் மற்ற சீக்கியர்களும் உதவி கோரியுள்ளனர். இந்த அரசு உதவி செய்ய வேண்டும் நான் கோரிக்கை விடுத்து கொள்கிறேன்" என விடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்சூரி லாலின் குடும்பத்தினர் தில்லியில் வாழ்ந்துவருவதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை மோசமானதையடுத்து, சிறப்பு விமானங்கள், விமான படை விமானங்கள் மூலம் 800க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.