ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், காந்தஹார் விமான நிலையத்திலிருந்து விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு படைகள் ஆப்கானி்ஸ்தானிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மக்கள் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார் விமான நிலையத்தின் மீது நேற்று இரவு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து விமான நிலைய தலைவர் மசூத் பஷ்டூன் கூறுகையில், "நேற்று இரவு, விமான நிலையத்தின் மீது மூன்று ராக்கெட்கள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில், இரண்டு ஓடுபாதையில் மோதியது. எனவே, அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. ஓடுபாதையை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இன்று மாலைக்கு பிறகு, விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
இதையும் படிக்க | பெகாஸஸ் விவகாரத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணை
ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் காந்தஹார் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான காந்தஹாரை கைப்பற்ற கடந்த பல வாரங்களாக தலிபான்கள் தாக்குதல் நடத்திவருகின்றனர்.