கரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அமெரிக்க உள்பட பல நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன.
அந்த வகையில், பெருந்தொற்றுக்கு மத்தியில் வாடகை செலுத்த முடியாத தவித்த அமெரிக்கர்களை அவர்களின் வீ்ட்டிலிருந்து வெளியேற்ற நாடு முழுவதும் 11 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு நேற்று முடிவுக்கு வந்த நிலையில், வாடகை செலுத்தாத லட்சக்கணக்கானோரை வீட்டிலிருந்து வெளியேற்றுவதில் பெரும் சிக்கல் நீடித்துவருகிறது.
முன்னதாக, மக்களுக்கு உதவும் வகையில் வீட்டு வாடகை செலுத்துவதற்காக அரசு பில்லியன் டாலர்களை ஒதுக்கியது. ஆனால், இந்த நிதியை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடற்றவர்களாகும் அபாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஜனநாயக கட்சி செனட் உறுப்பினர் ஜோ மஞ்சின் கூறுகையில், "நாம் இரக்கமுள்ளவராக இருக்க வேண்டும். உதவி செய்ய வேண்டும். பணம் இருந்தால், நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும்" என்றார்.
சில மாகாணங்களில், 20 சதவிகித மக்கள் வீட்டு வாடகையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, தென் மாகாணங்கள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 16 சதவிகித மக்கள் வீட்டு வாடகை செலுத்தவில்லை.
வீட்டிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க நாடாளுமன்றத்திடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், குடியரசு கட்சி உறுப்பினர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் தடையை நீட்டிக்காமலேயே பிரிதிநிதிகள் சபை ஒத்திவைக்கப்பட்டது.