தலிபான்களுக்கு சிம்மசொப்பமாக விளங்கும் ஆப்கானிஸ்தானின் பஞ்சஷேர் மாகாணத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அந்நாட்டை தலிபான் கைப்பற்றி ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தலைநகர் காபூல் உள்பட அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றிய தலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருவது அந்நாட்டில் உள்ள பஞ்சஷேர் மாகாணம். சுற்றிலும் மலைகள் சூழ, இந்நகரம் அமைந்துள்ளதே அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு.
தலைநகா் காபூலுக்கு வெறும் 100 கி.மீ. தொலைவில் உள்ள இந்த மாகாணத்தில் தான் துணை அதிபர் அமருல்லா சலே தஞ்சம் புகுந்துள்ளார். இவர் பிறந்த இடமும் இதுதான். இப்பகுதி மக்கள், தொடக்கம் முதலே தலிபான்களை எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியையும் கைப்பற்ற முனைந்துள்ளனர் தலிபான்கள். பஞ்சஷேர் மாகாணத்தை நோக்கி தாங்கள் சென்றுகொண்டிருப்பதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
தலிபான்கள், பஞ்சஷேர் மாகாணத்தின் எல்லையை அடைந்துவிட்டதாக துணை அதிபர் அமருல்லா சலேவும் தெரிவித்துள்ளார்.
சுமாா் 1.73 லட்சம் மக்கள் அங்கு வசித்து வருகின்றனர். தலிபான்களிடம் இருந்து தப்பிய நூற்றுக்கணக்கான ஆப்கன் வீரர்களும் இங்கு தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலிபான்களுக்கு ஒருகாலத்தில் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அகமது ஷா மசூதின் மகன் அகமது மசூதுடன் இணைந்து ஆப்கன் படைகள் தலிபான்களுக்கு எதிராக களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.