மோதல் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக ஆப்கானிஸ்தான் குழந்தைகளின் நிலை மோசமாக இருப்பதாக ஐ.நா. குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. ஆப்கனைவிட்டு மக்கள் பலரும் வெளியேறும் முனைப்பில் உள்ளனர். தங்கள் நாட்டினரை மீட்கும் பணியிலும் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் குழந்தைகளின் நிலை மோசமாக இருப்பதாக ஐ.நா. குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.
யுனிசெஃப் தெற்காசியாவின் இயக்குனர் ஜார்ஜ் லாரியா-அட்ஜே கூறியதாவது:
பாதுகாப்பு நெருக்கடி, உணவுப் பொருட்கள் விலை உயர்வு, கடுமையான வறட்சி, கரோனா பரவுதல் மற்றும் கடுமையான குளிர்காலம் உள்ளிட்ட காரணிகளால் குழந்தைகள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் ஆபத்தில் இருக்கின்றனர்.
போலியோ, டெட்டானஸ் மற்றும் பிற நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் அடிப்படை சுகாதாரப் பாதுகாப்பு அங்கு இல்லாமல் உள்ளது.
நாட்டில் போர் சூழல் நிலவி வருவதால், பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். குழந்தைகள் பள்ளிகள் மற்றும் தங்கள் நண்பர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய போக்கு தொடர்ந்தால், ஆப்கானிஸ்தானில் ஐந்து வயதுக்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அதுபோன்று 22 லட்சம் பெண் குழந்தைகள் உள்பட 40 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர நிலை ஏற்படும் என்றும் கணித்துள்ளது.
சுமார் 3,00,000 இளைஞர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கவலை, அச்சங்களுடன் போராடுகிறார்கள். எனவே, அவர்களுக்கு மனநல ஆதரவு தேவை என்றார்.