ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டிருந்த அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில், தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடினர்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு தலிபான்களுக்கு எதிராக அமெரிக்காவின் நேட்டோ கூட்டுப் படைகள் சண்டையிட்டு வந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் புதிதாக பதவியேற்ற அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் 31-க்குள் ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படும் என அறிவித்திருந்தார்.
இதன் விளைவாக ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார்.
இதையும் படிக்க | ஜெயலலிதா பல்கலை. இணைப்பு மசோதா தாக்கல்: அதிமுக வெளிநடப்பு
இதையடுத்து, ஆப்கனில் தங்கியிருக்கும் அமெரிக்கர்களை மீட்கும் பணியை ஆகஸ்ட் 14 முதல் அமெரிக்க படைகள் விரைவுபடுத்தியது. கடந்த 15 நாள்களில் சுமார் 1,20,000 மக்களை அமெரிக்க படைகள் வெளியேற்றினர்.
தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு மக்களை மீட்டு வந்த அமெரிக்க ராணுவத்தினர் நேற்று இரவு முழுமையாக வெளியேறினர். இதன்மூலம் அமெரிக்காவின் மீட்புப் பணிகளும் முடிவுக்கு வந்துள்ளன.
கடந்த 2001 முதல் ஆப்கனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியதையடுத்து, காபூல் விமான நிலையத்திற்குள் புகுந்த தலிபான் போரட்டக்காரர்கள் அமெரிக்கா விட்டுச் சென்ற ஆயுதங்கள், வாகனங்களை கைப்பற்றினர்.
மேலும், சந்தோசத்தை வெளிபடுத்தும் விதமாக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக் கொண்டாடினர்.