மாரடைப்பு ஏற்பட்டு துடித்த தனது எஜமானரின் செல்லிடப்பேசியை அவர் வளர்த்து வந்த நாய் நகர்த்திக் கொண்டு வந்து கொடுத்து, அவர் உடனடியாக அவசர அழைப்பை மேற்கொண்டு உதவி பெற உதவியுள்ளது.
நாய் எப்போதும் மனிதர்களின் நண்பன் என்பது இந்த சம்பவம் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, மாரடைப்பால் துடித்த தனது எஜமானரை விட்டுச் செல்லாமல், அவரது முகத்தை நாக்கால் தடவிக் கொடுத்து அவர் விழிப்புடன் இருக்கச் செய்துள்ளது அவர் வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயான ஸேடி. நியூ ஜெர்ஸியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
இதையும் படிக்கலாமே.. கூட்டுறவு வங்கியில் விவசாய பயிர்க்கடன் ரூ.12.110 கோடி தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
அதன் முதல் உரிமையாளர், வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்த போது, அதனை விலங்குகள் இல்லத்தில் சேர்ப்பித்துவிட்டார். அங்கு தனிமையில் வாடி வந்த இந்த ஸேடியை சில மாதங்களுக்கு முன்புதான் பிரையன் எடுத்துச் சென்று வளர்த்து வந்தார்.
ஸேடியைப் பார்த்ததுமே பிரையனுக்குப் பிடித்துவிட்டது. அதன் புத்திக் கூர்மை, அறிவு போன்றவற்றால் அவர் ஸேடியை வளர்க்க விரும்பினார். ஸேடிக்கும் பிரையனுக்கும் நல்ல நட்புறவு உருவானது. இதனால் பிரையன் தனது வீட்டுக்கு ஸேடியைக் கொண்டு சென்று வளர்த்து வந்தார்.
இந்த நிலையில்தான் பிரையன் மாரடைப்பு ஏற்பட்டு தவித்த போது, ஸேடி அவருடன் இருந்து அவரது உயிரைக் காக்க உதவியுள்ளது. இந்த தகவலை புகைப்படத்துடன் விலங்குகள் பராமரிப்பு இல்லம் தரப்பில் பகிரப்பட்டுள்ளது.