சென்னை: கூட்டுறவு வங்கியில் தமிழக விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்ட போது அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.
இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் சுமார் 16.13 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. மாரடைப்பால் துடித்தவரை சாதுர்யமாக காப்பாற்றிய செல்ல நாய்
விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பினால், கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் பயனடைவார்கள்.
விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், கடந்த 2016-ஆம் ஆண்டில் தமிழக அரசு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுகவினர் தேர்தலின் போது வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுகதான் என்று முதல்வர் கூறினார்.