ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அப்போதை அதிபர் அஷ்ரஃப் கனி ஆகியோர் கடைசியாக ஆலோசனையில் ஈடுபட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அப்போதை அதிபர் அஷ்ரஃப் கனி ஆகியோர் தொலைபேசியில் பேசியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அப்போது, ராணுவ உதவி, அரசியல் வியூகம், தகவல்களை எப்படி பகிர்ந்து கொள்வது குறித்த உத்திகள் விவாதிக்கப்பட்டதாகவும் இதுவே அவர்களின் கடைசி ஆலோசனை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் விரைவாக கைப்பற்றுவார்கள் என்பதை இரண்டு தலைவர்களும் அறிந்திருக்கவில்லை என்பது அவர்களின் உரையாடல்களின் மூலம் தெரியவந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை 23ஆம் தேதி, இருவரும் கிட்டத்தட்ட 14 நிமிடங்கள் பேசியுள்ளனர். அப்போது, ஆப்கானிஸ்தானில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தன்னிடம் திட்டமிருப்பதாக கனி வெளிப்படையாக தெரிவித்தால் உதவி அளிக்கிறோம் என பைடன் கூறியுள்ளார்.
அதேபோல், ராணுவ வியூகத்தை தொடர்ந்து செயல்படுத்த சக்தி வாய்ந்த ஆப்கனியர்களிடம் பணம் கேட்கும்படியும் இந்த முயற்சிகளுக்கு தலைமை வகிக்க ஒருவரை நியமிக்கவும் பைடன் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
உரையாடலின்போது, அமெரிக்கவிடம் பயிற்சி மற்றும் நிதியுதவி பெற்ற ஆப்கன் பாதுகாப்பு படையை பாராட்டிய பைடன், "உங்களிடம் சிறந்த ராணுவம் உள்ளது. 70,000 லிருந்து 80,000 தலிபான்களை எதிர்க்க 3,00,000 படைகளை கொண்டுள்ளது ஆப்கானிஸ்தான்.
போரை நடத்த அவர்களுக்கு திறன் உள்ளது. உலகம் மற்றும் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் நிலவும் கருத்துகளை பற்றி நான் கூறி உங்களுக்கு தெரிய வேண்டாம். தலிபான்களுக்கு எதிரான போர் சிறப்பாக நடைபெறவில்லை என நம்புகிறேன். எனவே, உண்மையோ பொய்யோ வேறு விதமான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் தேவை உள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் முயற்சியில் தலிபான்கள்
புதிய ராணுவ திட்டம் இருப்பதாக ஆப்கனின் முக்கிய அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கலாம். இது புதிய கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் அரசை தக்கவைக்க மட்டும் அல்ல மேலும் நீடித்திருக்க வைக்கும் வகையில் அரசியல், பொருளாதார, தூதரக ரீதியாக கடினமான போரை தொடர்ந்து நடத்த போகிறோம்" என்றார்.
இந்த உரையாடல் நடைபெறுவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்புதான், அமெரிக்க விமான படை தாக்குதல் நடத்தியது. தாக்குதல் தோஹா அமைதி ஒப்பந்தத்திற்கு எதிரானது என தலிபான்கள் விமர்சித்திருந்தனர். அதன் பின்னர், ஆகஸ்ட் 15ஆம் தேதி, தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன்பு அதிபர் மாளிகையிலிருந்து கனி வெளியேறினார்.
இதையடுத்து, ஆயிரகணக்கான ஆப்கன் மக்களும் 13 அமெரிக்க படைகளும் அங்கிருந்து வெளியேறியது. இதற்கு மத்தியில், காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட அப்பாவி ஆப்கன் மக்கள் கொல்லப்பட்டனர்.