'தயவுசெய்து இலங்கைக்கு முடிந்தவரை உதவுங்கள்' - பிரதமர் மோடியிடம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

தயவுசெய்து இலங்கைக்கு முடிந்தவரை உதவுங்கள் என இந்திய பிரதமரிடம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
சஜித் பிரேமதாச
சஜித் பிரேமதாச
Updated on
1 min read

தயவுசெய்து இலங்கைக்கு முடிந்தவரை உதவுங்கள் என இந்திய பிரதமரிடம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயா்வு, எரிபொருள், உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் தொடர் போராட்டம் காரணமாக இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. 

ஊரடங்கை மீறியும் இலங்கை அதிபா் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. 

இலங்கையில் மக்களின் நிலை கண்டு, பிரதமர் மகிந்த ராஜபட்சவைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்த நிலையில், அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைய அதிபர் கோத்தபய ராஜபட்ச நடவடிக்கை எடுத்துள்ளார். 

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தியா, எரிபொருள், கடனுதவி அளித்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் 'ஐக்கிய மக்கள் சக்தி' கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச, 'தயவுசெய்து இலங்கைக்கு முடிந்தவரை உதவுங்கள். இது நமது தாய்நாடு, நமது தாய்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், 'இலங்கை அமைச்சர்கள் ராஜிநாமா என்பது கண்துடைப்பு நாடகம். நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக போடப்படும் நாடாகமாகும். இலங்கை மக்களை முட்டாளாக்கும் முயற்சி இது.

அரசியல்வாதிகள் தங்களுடைய இருக்கையை பரிமாறிக்கொள்வதற்கு இது ஒன்றும் 'ம்யூசிக் சேர்' விளையாட்டு அல்ல. இடைக்கால அரசு என்பது எதுவுமில்லை. இது உள் கட்சி விளையாட்டு' என்றும் கடுமையாக விமரிசித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com