திபெத் விவகாரத்தில் சீனாவின் நிலைபாட்டை ஆதரித்த நேரு மிக பெரிய தவறு செய்துவிட்டதாக பலர் நினைக்கிறார்கள், ஆனால், தன் நாட்டுக்கு எது சரி என கருதினாரோ அதையே அவர் செய்தார் என நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் ஜனாதிபதி பென்பா செரிங் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த பென்பா செரிங், 2014க்கு பிறகு திபெத் விவகாரத்தில் இந்தியா தனது நிலைபாட்டை மாற்றி கொண்டதாக கூறினார். பைடன் அரசாங்கத்தின் உயர்நிலை அலுவலர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திப்பதற்காக அவர் வாஷிங்டன் சென்றுள்னார்.
செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், "திபெத் விவகாரத்தில் நேருவின் முடிவுகள் அவரின் உலக பார்வையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. சீனா மீது அவர் அதிகமான நம்பிக்கையும் வைத்திருந்தார். அதை செய்ததற்காக அவரை குறை கூற மாட்டேன். அனைத்து நாடுகளும் தன்னுடைய நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் தருவதை புரிந்து கொள்ள முடிகிறது.
அந்த காலத்தில் தன் நாட்டுக்கு எது சரி என கருதினாரோ அதையே அவர் செய்தார். இந்திய மட்டுமல்ல பல நாடுகள், திபெத் விவகாரத்தில் சீனாவே ஆதரித்தன. நிகழ்வுகள் நடந்து முடிந்த பிறகு, நேரு தவறு செய்துவிட்டதாக பலர் தற்போது நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், கடந்த 1962ஆம் ஆண்டு, இந்தியா மீது சீன படையெடுத்த காலத்தில் சீனா மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார்.
இதையும் படிக்க | மின்வெட்டை தடுக்க முயற்சி; இந்தியன் ரயில்வே புதிய திட்டம்
இந்த விவகாரம் அவரை புண்படுத்தியதாகவும் அவர் இறப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் சிலர் நினைக்கிறார்கள். 1950களில் சீனாவின் மாவோவை நேரு சந்தித்தபோது, சீனர்களும் இந்தியர்களும் சகோதரர்கள் என அவர் கூறினார். அந்த அளவுக்கு அவர் சீனர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தார்" என்றார்.
2014க்கு பிறகு, இந்தியா பல மாற்றங்களை சந்தித்துள்ளதாக கூறிய அவர், "திபெத், சீன குடியரசின் ஒரு பகுதி என்று திரும்பத் திரும்பச் சொல்லாமல் இந்தியா தனது (நேருவின்) கொள்கையை மாற்றிக்கொண்டதாக நான் நினைக்கிறேன். ஏனெனில் இந்தியா 'ஒரே சீனா' கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றால், காஷ்மீர் மற்றும் லடாக் தொடர்பான விவகாரத்தில் சீனாவும் அதே கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைபாடு" என்றார்.