உக்ரைனுக்கு ரூ. 4,326 கோடி மதிப்பிலான ராணுவ உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. ரஷியா - உக்ரைன் போர் 5 மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது.
ரஷியப் படை உக்ரைன் நாட்டில் ஒவ்வொரு பகுதிகளாக கைப்பற்றி வருகிறது. உக்ரைனும் முடிந்தவரை பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.
இதில், உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் நேரடியாக உதவ முடியாத சூழ்நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. நிதி மற்றும் ராணுவ உதவி செய்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு ரூ. 4,326 கோடி(550 மில்லியன் டாலர்) மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் இதனை அறிவித்துள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்பிற்காக 2021ம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து அமெரிக்காவின் பாதுகாப்பு துறை சார்பில் நிதி வழங்கப்பட்டு வருவதாகவும் 17 ஆவது நிதியுதவிக்கு அதிபர் பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இதன் மூலமாக அதிவேக ராக்கெட் சாதனங்கள், பீரங்கி சாதனங்கள் உள்ளிட்ட ராணுவ உதவிகளை உக்ரைன் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிபர் பைடன் பொறுப்பேற்றது முதல் இதுவரை உக்ரைனுக்கு மொத்தம் ரூ.68,580 கோடி மதிப்பிலான ராணுவ உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | ராக்கெட் குண்டுவீச்சில் 50 உக்ரைன் போா்க் கைதிகள் பலி