பாகிஸ்தானின் ஷியா பிரிவினருக்கான மசூதியொன்றில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
பதற்றம் நிறைந்த கைபா்-பக்துன்கவா மகாணத்தின் தலைநகா் பெஷாவா் நகரில், ஷியா பிரிவினருக்கான மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மசூதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகளில் ஒருவா், தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்துக்குச் சென்று தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இந்தத் தாக்குதலில் பலி எண்ணிக்கை தற்போது 62 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் முஹம்மது ஆசிம் கூறினார்.
ஷியா மசூதி தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை தாக்குதல் பெஷாவரில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத செயல் என்று அறிக்கை கூறுகிறது. பெஷாவர் குண்டுவெடிப்புக்கு அதிபர் ஆரிப் ஆல்வியும், பிரதமர் இம்ரான் கானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.