இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதால் அரசுத் துறைகள் சிலவற்றை தனியார் மயமாக்க சர்வதேச நாணய நிதியம்(IMF) பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்) உலக நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதோடு, அந்நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களைக்கூறி அதை சரி செய்ய சில பரிந்துரைகளை வழங்குவது வழக்கம்.
அதன்படி, தற்போது இலங்கை சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி குறித்து அறிக்கை அளித்த ஐஎம்எஃப், சில மாகாணங்களில் நஷ்டத்தில் நடத்தப்படும் அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்க ஆலோசனை வழங்கியுள்ளது.
இதையும் படிக்க: இலங்கையில் தெருவிளக்குகளை அணைக்க முடிவு
குறிப்பாக, சிலோன் அரசு ரயில்வேயையும் தனியாரிடம் ஒப்படைக்க அதில் பரிந்துரைத்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் அமுனுகமா தெரிவித்ததுடன், ’பொருளாதார நெருக்கடியின்போது வரும் சில ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் முக்கியமானவை. ஐஎம்எஃப்-ன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் சில துறைகள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இருப்பினும், பரிந்துரைகளை செயல்படுத்தலாமா வேண்டாமா என்பது அரசின் முடிவு’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதிபர் கோத்தபய ராஜபட்ச பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர ஐஎம்எஃப் உடன் இணைந்து செயலாற்ற உள்ளதாக தெரிவித்திருந்ததும் ஐஎம்எஃப் அளித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய கடந்த மார்ச் 28 ஆம் தேதி இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.