தேர்தல் முறைகேடு வழக்கு தொடர்பாக மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மா் ஜனநாயக அரசின் முன்னாள் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு எதிராக ரகசியமாக நடைபெற்று வந்த ஊழல் வழக்கு விசாரணையில், அவா் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
ஏற்கெனவே, மற்ற முறைகேடு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மொத்தம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்தல் முறைகேடு வழக்கிற்காக மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஸ்டார்பக்ஸ் தலைமைச் செயலராக லக்ஷ்மண் நரசிம்மன் தேர்வு
மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி அவரது ஆட்சியை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கலைத்தது. அத்துடன், அவரையும் மற்ற அரசியல் தலைவா்களையும் கைது செய்து அவா்கள் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்குகளில் அவா்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகிறது.