சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 17 நாள்களாக காணாமல்போனவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28 வயதான கான் யூ, நீர்மின் நிலைய ஊழியர். செப்டம்பர் 5 அன்று சிச்சுவானில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, சக ஊழியர் லுவோ யோங்குடன் தங்கியிருந்தார்.
நிலநடுக்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய கான் மற்றும் லுவோ வேறு இடத்திற்கு அடித்துச் செல்லப்பட்டனர். அங்கு ஒரு இடத்தில் நாள் முழுவதும் உணவு மற்றும் மொபைல் சிக்னல் இல்லாமல் இருந்துள்ளனர். இறுதியில் இருவரும் செப்.7ம் தேதி அந்த இடத்தை விட்டு வெளியேறினர். பின்னர், 12 மைல்களுக்கு மேல் நடந்தனர்.
ஆனால் குறைந்த பார்வை திறன் கொண்ட கான், தனது கண்ணாடிகளை இழந்துவிட்டதால் மலைப்பாங்கான இடத்தில் நடக்கச் சிரமம் ஏற்பட்டது. பின்னர் அவர் நண்பர் கானை ஒரு இடத்தில் இருக்குமாறு அமரவைத்துவிட்டு, மீட்புப் படையுடன் வருவதாகக் கூறிச் சென்றார்.
பிரிந்துசென்ற லுவோவை செப்.8 அன்று மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர், ஆனால் கானை விட்டுச் சென்ற இடத்திற்குத் திரும்பியபோது, அங்கு அவர் இல்லை.
மீட்புப் படையினர் மூலம், மலைப்பகுதியை நன்கு அறிந்த ஒருவர் மூலம் கானின் கால்தடங்கள் மற்றும் ஆடைகளை வைத்து, சுமார் 17 நாள்களுக்கு பின்னர் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் அங்கிருந்த 17 நாள்களும் காட்டுப் பழங்களை உண்டும், தண்ணீர் குடித்தும் உயிர் பிழைத்ததாக கான் கூறினார். அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல எலும்பு முறிவுகள் இருப்பதாக மருத்துவர் அறிவித்தனர். அதன்பின்னர், கான் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் பெற்றோருடன் மீண்டும் இணைந்தார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.
சிக்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 93 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.