இஸ்லாமாபாத்: இலங்கையை அடுத்து கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பாகிஸ்தான், தனது தூதரக ஊழியர்களுக்குக் கூட ஊதியம் அளிக்க முடியாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
செர்பியாவிலிருக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கான தூதரகத்தில் பணியாற்றும் தங்கள் நாட்டு ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், அவர்களது பிள்ளைகள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல், பள்ளியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அல் அரேபியா போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறி, வெளியான தகவலை மூடி மறைக்கப் பார்க்கிறது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்.
இதுபோல, அர்ஜென்டினா, புரூனே உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக ஊழியர்களுக்கும் ஊதிய பாக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வாஷிங்டனில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதிய பாக்கி நிலுவை வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.