
அரசு தொலைக்காட்சியான சேனல் 4-ஐ விற்பனை செய்ய பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. அரசுத் தொலைக்காட்சியை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசு முடிவை எதிர்க்கட்சி, தொலைக்காட்சி நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பலதரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
சேனல் 4 ஐ தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் தற்கால ஊடக மாற்றங்களுக்கு ஏற்ப ஒளிபரப்பு சேவை மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளது.
.jpg)
இது தொடர்பாக சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ள கலாசாரத் துறை செயலர் நாடின் தொர்ரிஸ், நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் அரசு நடத்திவரும் சேனல் 4 பின்னடைவைவே சந்தித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சேனல் 4-ஐ தனியாருக்கு விற்றால், அதில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிளாக் மிரர், டெர்ரி கேர்ள்ஸ் போன்ற மக்கள் பாராட்டைப் பெற்ற நிகழ்ச்சிகளையும், அதிமுக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையும், ஆவணப் பட நிகழ்ச்சிகளையும் இழக்க நேரிடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பிரிட்டனில் 1982ஆம் ஆண்டு சேனல் 4 தொடங்கப்பட்டது. அரசு சார்பில் மக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த தொலைக்காட்சி, விளம்பரங்களின் வருவாயைக் கொண்டும், மக்கள் வரியின் மூலமும் தொடர்ந்து இயங்கி வந்தது.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த சேனல் 4 தொலைக்காட்சியை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசு முடிவுக்கு தொலைக்காட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.