இலங்கை: பதவியேற்ற 24 மணி நேரத்தில் ராஜிநாமா செய்தார் நிதியமைச்சர்

கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே, இலங்கையில் நிதியமைச்சராக பதவியேற்று 24 மணி நேரத்துக்குள் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் அலி சாப்ரி.
இலங்கை: பதவியேற்ற 24 மணி நேரத்தில் ராஜிநாமா செய்தார் நிதியமைச்சர்
இலங்கை: பதவியேற்ற 24 மணி நேரத்தில் ராஜிநாமா செய்தார் நிதியமைச்சர்


கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே, இலங்கையில் நிதியமைச்சராக பதவியேற்று 24 மணி நேரத்துக்குள் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் அலி சப்ரி.

இலங்கையில் நேற்று நிதியமைச்சகம், கல்வி உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கையின் புதிய நிதியமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்ட அல் சப்ரி இன்று தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இலங்கை அரசுக்கு ஆதரவளித்துவந்த கட்சிகள் தங்களது ஆதரவை திரும்பப் பெற்று வருவதாலும், சில ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தன்னிச்சையாக செயல்பட முடிவு செய்திருப்பதாலும் இலங்கை அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது.

பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கை மக்களின் போராட்டம் ஒரு பக்கம், மறு பக்கம் அரசியல் குழப்பம் என இலங்கை அரசுக்கு எதிர்ப்புக் குரல் வலுத்து வருகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கும் நிலையில், முந்தைய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த தனது சகோதரர் பசில் ராஜபட்சவை பதவியிலிருந்து நீக்கியிருந்தார் கோத்தபய ராஜபட்ச. 

இலங்கை நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபட்சவுக்கு மாற்றாக அலி சப்ரி புதிய நிதியமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இவருடன், ஜி.எல். பெய்ரிஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், திணேஷ் குணவர்த்தனே கல்வித் துறை அமைச்சராகவும், ஜான்ஸ்டன் ஃபெர்னாண்டோ நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் பதவியேற்றிருந்தனர்.

நிரந்தர அரசு அமையும் வரை தற்காலிக அமைச்சரவை செயல்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே தெரிவித்திருந்தார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமையை சமாளிக்க, பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவியைக் கோரும் வகையில் அமெரிக்கா செல்ல பசில் ராஜபட்ச திட்டமிட்டிருந்த நிலையில், இலங்கையின் புதிய அமைச்சரவையில் பசில் ராஜபட்ச இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சியாக, பதவியேற்ற 24 மணி நேரத்தில் இலங்கை நிதியமைச்சர் பதவியை அல் சாப்ரி ராஜிநாமா செய்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து அனைத்து அமைச்சா்களும் நேற்று ராஜிநாமா செய்த நிலையில், அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கும் வகையில் புதிய அமைச்சரவை அமைக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச திங்கள்கிழமை அழைப்பு விடுத்தாா்.

ஆனால், இந்த அழைப்பை ஏற்க முக்கிய எதிா்க்கட்சியான சமகி ஜன பலவெகய (எஸ்ஜேபி) உள்ளிட்ட கட்சிகள் மறுத்துவிட்டன. அதிபரும், பிரதமரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்; அதற்கு எதிராக நாங்கள் செயல்பட முடியாது என எஸ்ஜேபி கட்சி தெரிவித்தது.

4 அமைச்சா்கள் நியமனம்

பிரதமா் மகிந்த ராஜபட்ச தவிர அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும் பிற பணிகள் சட்டபூா்வமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் 4 அமைச்சா்களை அதிபா் கோத்தபய ராஜபட்ச திங்கள்கிழமை நியமனம் செய்தாா். அதன்படி, நிதியமைச்சராக அலி சப்ரி, வெளியுறவு அமைச்சராக ஜி.எல்.பெரிஸ், கல்வி அமைச்சராக தினேஷ் குணவா்த்தன, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக ஜான்ஸ்டன் ஃபொ்னாண்டோ ஆகியோா் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டனா்.

ஏற்கெனவே நிதியமைச்சராக இருந்த தன் சகோதரா் பசில் ராஜபட்சவுக்கு பதிலாக நீதித் துறை அமைச்சராக இருந்த அலி சப்ரியை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமித்தா. மற்ற மூவருக்கும் ஏற்கெனவே வகித்த துறைகளே வழங்கப்பட்டன. இந்த நிலையில், இன்று அலி சப்ரி தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.

இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியா அறிவித்துள்ள பொருளாதார உதவிகள் தொடா்பாக பசில் ராஜபட்ச பேச்சுவாா்த்தை நடத்தி வந்தாா். மேலும், சா்வதேச நிதியத்தின் உதவியைப் பெறுவதற்காக அவா் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்ல இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com