உக்ரைன் போரில் தாயை இழந்த சிறுமி தனது தாயை மறக்க முடியாமல் எழுதிய கடிதம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
உக்ரைன் - ரஷியா இடையே போர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை ரஷிய ராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
அரசுக் கட்டடங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், உற்பத்தி ஆலைகள் என அனைத்து இடங்களிலும் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் எதிர்தாக்குதலை நடத்தி வருகிறது.
எனினும் இரு நாடுகளுக்கு இடையிலான இந்தப்போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் போரில் தாயை இழந்த சிறுமி தனது தாயின் நினைவாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவர் தெரிவித்துள்ளதாவது,
தாயே!. உலகில் நீங்களே சிறந்த தாய். நான் உங்களை ஒருபோதும் மறக்கமாட்டேன். நீங்கள் சொர்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் நல்ல மனிதனாக இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு சொர்க்கத்தில் இடம்பெறுவேன். சொர்க்கத்தில் உங்களை சந்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் போரில் தாயை இழந்த சிறுமி, தனது டைரிக் குறிப்பேட்டில் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை உக்ரைனின் உள்துறை அமைச்சர் ஆன்டேன் கெராஷ்சென்கோ பகிர்ந்துள்ளார்.