இலங்கையில் போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு பொருள்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எரிபொருள்களின் விலை நேற்று ஒரே நாளில் கடுமையாக உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு ரம்புக்கனை என்ற இடத்தில் 8 மணிநேரத்திற்கும் மேலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் காவல்துறையினர் கலைத்தனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் பலியான நிலையில், 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.