அதிபருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் குறைக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபட்ச இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.
இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசிய அவர் கூறியதாவது:
"நாட்டை அரசியல் ரீதியாக நிலைப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளில் ஒன்றாக அதிகார இடமாற்றம் இருக்கும். பொருளாதாரத்தை மீட்பதற்காக சர்வதேச செலாவணி நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகார இடமாற்றம் உதவும்.
பொருளாதார பிரச்னைகளுக்குத் தீர்வு காண, நாட்டின் சமூக மற்றும் அரசியல் நிலைத்தன்மை முக்கியமானது. நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு நிலையே சீர்திருத்தத்தின் தொடக்கமாகும்" என்றார் அவர்.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அதிபர்தான் காரணம் என தொடர்ந்து 11-வது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) அதிபர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | இதையெல்லாம் செய்திருக்கக் கூடாது: கோத்தபய ராஜபட்ச
முன்னதாக, திங்கள்கிழமை புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட 17 அமைச்சர்களிடம் பேசிய அதிபர் கோத்தபய ராஜபட்ச பொருளாதார நெருக்கடிக்கான தவறை ஒப்புக்கொண்டார்.