உக்ரைன் மீது படையெடுத்து பல முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி வருகிறது. துறைமுக நகரான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக இன்று ரஷிய பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைனைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர், கீவ் நகரில் இருக்கும் தனது புதிய விடுதி ஒன்றை ரஷிய படையினர் கைப்பற்றி, அதனை முகாமாகப் பயன்படுத்தி வந்ததை சிசிடிவி கேமரா மூலம் பார்த்துவிட்டு, அதிர்ந்து போனார்.
விடுதியின் வாயிலில் இருந்த சிசிடிவி கேமராவில், ரஷிய படையினர் வெடிபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு போர்க் கருவிகளை தனது விடுதிக்குள் எடுத்துச் செல்வதையும், அதன் நுழைவு வாயிலில் ஏராளமான ரஷிய படையினர் இருப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
உடனடியாக, உக்ரைன் ராணுவப் படையை தொடர்பு கொண்டு, தனது விடுதி அமைந்திருக்கும் இடத்தைப் பற்றி தகவல் கூறி அதன் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், உக்ரைன் படைகள் வெற்றி பெற வேண்டும். அதற்காக என்னவேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தேன். எங்கள் நாட்டிலிருந்து அந்நியர்கள் வெளியேற்றப்பட வேண்டும். அதற்காக என்னால் ஆன சிறிய விஷயத்தை செய்தேன் என்கிறார் நாட்டுப்பற்றோடு.