கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு மிகவும் கடினமான நேரத்தில் உயிர் மூச்சு போல உதவிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய நாட்டுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைந்த அரசை அமைப்பதற்கான அரசியல் கட்சித் தலைவர்கள் இடம்பெற்ற நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தில் இன்று உரையாற்றிய அதிபர் ரணில் இதனைத் தெரிவித்தார்.
இங்கே இந்திய நாட்டிலிருந்து நமக்கு வழங்கப்பட்ட உதவிகளை குறிப்பிட்டுச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நமக்கு மிகவும் நெருங்கிய அண்டை நாடாகவும் நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் உதவியதையும் குறிப்பிட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, நமக்கு மிகவும் கஷ்டமான நேரத்தில் உயிர் மூச்சு போல உதவியிருக்கிறது. நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும், பிரதமர் மோடிக்கும் இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
ஆறு முறை பிரதமராக பதவி வகித்தவா் ரணில் விக்ரமசிங்க. தற்போது அதிபராகியுள்ள அவருக்கு, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதுடன், அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது.
உணவு, எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் சீரான விநியோகத்தை உறுதி செய்ய வேண்டிய உடனடி சவால் அவா் முன் உள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்காக, சா்வதேச நிதியத்துடன் முக்கியப் பேச்சுவாா்த்தைகளை ரணில் தொடா்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியாவுடன் எப்போதும் அவா் நல்லுறவை பராமரித்து வந்துள்ளாா். ரணில் பிரதமராக இருந்தபோது, இந்திய பிரதமா் நரேந்திர மோடி இலங்கைக்கு இருமுறை பயணம் மேற்கொண்டாா்.