பெய்ஜிங்: சுமார் இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக, சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனைகளுக்கான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வருகிறது.
சீனாவில் 6 மாதங்களுக்கு பிறகு கரோனா தொற்று பரவல் திடீரென அதிகரிக்க தொடங்கியதால் தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் விரக்தி அடைந்த மக்கள் கட்டுப்பாடுகளை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் குதித்தனர். பின்னர் இந்த போராட்டம் அரசு எதிர்ப்பு போராட்டமாக மாறியது. அதிபர் ஜின்பிங்கை பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
காவல்துறை மூலம் பெரும்பாலான நகரங்களில் போராட்டங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் ஒரு சில நகரங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே மக்களின் கோபத்தை தணிக்கும் விதமாக, சுமார் இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக, சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனைகளுக்கான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது பெய்ஜிங்கில் கரோனா பரிசோதனை தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
புதிய அறிவிப்பின்படி, பெய்ஜிங்கில் உள்ள வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வணிக கட்டடங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களிலும் நுழைவதற்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் (நெகடிவ்) இனி அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பெய்ஜிங்கில் வசிப்பவர்கள் உணவகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மதுபான விடுதிகள் போன்றவற்றில் நுழைவதற்கு 48 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட கரோனா பரிசோதனை (நெகடிவ்) சான்றிதழ் அவசியம் என்கிற கட்டுப்பாடு தொடருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான கரோனா தொற்று பாதிப்பை பதிவு செய்து வருகிறது. திங்கள்கிழமை 2,260 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.