
உலகின் வெப்பமான நாடாக அறியப்படும் குவைத்தில் அண்மையில் பெய்த கனமழை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல நாடுகளிலும் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டவண்ணம் இருக்கின்றன. பருவநிலை பிறழ்வுகளை கணிக்க முடியாமல் விஞ்ஞானிகள் தவித்துவரும் நிலையில் உலக நாடுகள் கார்பன் வெளியீட்டு அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் உலகின் வெப்பமான நாடாக அறியப்படும் குவைத்தில் சமீபத்தில் கனமழை பெய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக குவைத் நாடானது அதீத வெப்பத்துடன் காணப்படும். அந்நாட்டில் அதிகபட்சமாக 55 டிகிரி செல்சியஸ் வரை கூட வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | போர் விமானத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி
இந்நிலையில் அந்நாட்டில் கனமழையுடன் சேர்த்து பனிப்பொழிவும் ஏற்பட்டு வருவது காலநிலை விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. குவைத் நாட்டில் இதுவரை பனிப்பொழிவு ஏற்படாத நிலையில் தற்போது ஆலங்கட்டி மழையுடன் கூடிய பனிப்பொழிவு பெய்து வருவது விடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
காலநிலை மாற்றம் குவைத் நாட்டின் பருவநிலையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது விஞ்ஞானிகளை கவலை கொள்ளச் செய்துள்ளது.