ஸ்காட்லாந்து அரசு நீர்வாழ் உயிர்களைப் பாதுகாக்க ஆற்றங்கரையோரம் மரங்களை வளர்க்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
காலநிலை மாற்றமானது உலகின் பல்வேறு பகுதிகளிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் புவி வெப்பநிலையானது வேளாண்மை தொடங்கி கடல்வாழ் உயிர்களை வரை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் ஸ்காட்லாந்து நாட்டின் ஆறுகளில் உள்ள சாலமோன் வகை மீன்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புவி வெப்பநிலை உயர்வால் பாதிக்கப்பட்டு வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
குளிர்கால பிரதேச உயிரான சாலமோன் மீன்கள் இயல்பாக 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாழக்கூடியவை. ஆனால் புவி வெப்பநிலை காரணமாக அவை 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் கடந்த 1957ஆம் ஆண்டிலிருந்து ஸ்காட்லந்து ஆறுகளிலிருந்து கிடைக்கும் சாலமோன் வகை மீன்களின் எண்ணிக்கை 80 சதவிகிதம் குறைந்துள்ளது.
கோடை காலங்களில் வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக பதிவாகும் வெப்பநிலையால் ஆறுகள் அதிக வெப்பத்தை உள்வாங்குவதாகவும், அதனால் சாலமோன் மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிர்கள் அபாயத்தை சந்தித்து வருவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | புதிதாக கண்டறியப்பட்ட 9 ஆயிரம் தாவர இனங்கள்
கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டின் ஆறுகளின் வெப்பநிலை 70 சதவிகிதம் வரை உயர்ந்ததாகவும், இதனால் நீர்வாழ் உயிர்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் புவி வெப்பநிலையால் அதிகரித்துவரும் ஆறுகளின் வெப்பநிலையைக் குறைக்க ஆற்றங்கரையோரம் உள்ள நிலப்பகுதிகளில் மரங்களை நட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக அந்நாட்டின் மிகவும் பிரபலமான சால்மன் மீன்பிடி ஆறுகளில் ஒன்றான அபெர்டீன்ஷையரில் உள்ள டீ ஆறு மற்றும் அதன் முக்கிய துணை ஆறுகளின் கரையோரங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை அந்நாட்டு அரசு நட்டுள்ளது.
இதையும் படிக்க | ஈக்குவடாரில் நிலச்சரிவு: 24 பேர் பலி
2035ஆம் ஆண்டுக்குள் அப்பகுதிகளில் 10 லட்சம் மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் அச்சுறுத்தும் இயற்கை நடவடிக்கையாக மாறியுள்ள நிலையில் ஸ்காட்லாந்து அரசின் இந்த நடவடிக்கை புவி வெப்பமயமாதலின் ஆபத்தை உணர்த்துவதாக உள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.