உலகளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிதாக 9 ஆயிரத்திற்கும் அதிகமான தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதெமி இதழில் உலகளவில் உள்ள தாவர இனங்கள் குறித்த ஆய்வறிக்கை வெளியானது. 90 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஒவ்வொரு நிலப்பகுதிகளிலும் உள்ள தாவர இனங்களின் எண்ணிக்கை, வகைகள், இனம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் உலகளவில் 73 ஆயிரத்து 300 தாவர இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 9 ஆயிரம் புதிய தாவர இனங்களும் அடக்கம்.
இதையும் படிக்க | அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை கடும் உயர்வு
இந்த ஆய்வறிக்கையின் முதன்மை ஆசிரியரும், அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தின் சூழலியல் பேராசிரியருமான ஜிங்ஜிங் லியாங், “உலகம் முழுவதும் உள்ள தாவர இனங்களை வகைப்படுத்துவதில் இந்த ஆய்வு முக்கியப் பங்கு வகிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
தாவர இனங்களை வகைப்படுத்துவது ஒரு புதிரை மேற்கொள்வது போன்று இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஈக்குவடாரில் நிலச்சரிவு: 24 பேர் பலி
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட பல தாவரங்கள் இன்னும் எந்த இனத்தைச் சேர்ந்தது என வகைப்படுத்தப்படாத நிலை உள்ளதாகவும், அரியவகை தாவரங்களைக் கொண்ட நிலப்பகுதிகளில் அமேசான் காடுகள் முதன்மையான இடத்தில் இருப்பதாகவும் லியாங் தெரிவித்துள்ளார்.
அமேசான் காடுகளில் ஹெக்டேருக்கு 200 தாவர இனங்கள் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. உலகின் மொத்த தாவர இனங்களில் பாதி தென் அமெரிக்காவில் உள்ளதாகவும் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் பல அரிய வகை தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆய்வுக்குழு காலநிலை மாற்றத்தால் பல தாவர இனங்கள் அழிந்து போயிருக்கலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.