சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற பிப்ரவரி 21 முதல் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக பாதிப்பு அதிகமான நேரங்களில் பெரும்பாலான நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவிலும் 2020 தொடக்கத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் வெளிநாட்டுப் பயணிகள் ஆஸ்திரேலியா வரலாம் என்றும் அப்படி வருவோர் கண்டிப்பாக முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அந்த நாட்டு பிரதமா் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலினால் வெளிநாடுகளிலிருந்து பயணிகள் ஆஸ்திரேலியா வருவதற்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச்சில் முழு தடை விதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியா்களுக்கும் அந்த நாட்டில் வசிப்பவா்களும் மட்டும் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.