உக்ரைன் தலைநகர் கீவ் அருகே அந்நாட்டின் ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது.
தற்போது உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குள் ரஷியப் படைகள் நுழைந்து அரசின் கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கீவ் அருகே உக்ரைன் ராணுவத்தினர் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகியுள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷிய படையின் தாக்குதலில் கீழே விழுந்ததா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதா எனத் தகவல் வெளியாகவில்லை.