உக்ரைன் மீதான ரஷிய போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அனைவரின் எண்ணமும் உக்ரைனிலுள்ள மக்கள் மீதே இருக்கிறது. இந்நிலையில்தான், உக்ரைனின் ஸ்நேக் தீவைக் காக்க, ரஷிய படையின் இறுதி எச்சரிக்கையை புறந்தள்ளி கடைசி வரை ஆயுதத்தை கைவிடாமல் வீரம் காத்த 13 உக்ரைன் வீரர்களைப் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
கருங்கடலில், உக்ரைனுக்குச் சொந்தமான ஸ்நேக் தீவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 13 உக்ரைன் வீரர்கள், மிகுந்த நெஞ்சுரத்தோடு இறு எச்சரிக்கைக்கு அசைந்து கொடுக்காமல் வீரத் காத்து, வீர மரணம் அடைந்தது குறித்து, அந்நாட்டு அதிபரும் செய்தியாளர் சந்திப்பில் உறுதி செய்துள்ளார்.
உக்ரைனிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருந்த அந்தத் தீவை சுற்றி வளைத்த ரஷிய படைகள், உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு எச்சரிக்கை செய்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரத்த ஆறு ஓடுவதையும், தேவையற்ற மரணத்தையும் தவிர்க்குமாறு ரஷிய படைகள் விடுத்த எச்சரிக்கைக்கு எந்த வகையிலும் மனம் தளராமல் ஆயுதத்தின் மூலமே பதிலடி கொடுத்த 13 உக்ரைன் வீரர்களும் ரஷியப் படையின் குண்டு வீச்சினால் வீர மரணம் அடைந்தனர். இதனை உக்ரைன் உறுதி செய்துள்ளது.
போர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸலென்ஸ்கி, அனைத்து எல்லைப் படை வீரர்களும் நெஞ்சுரத்துடன் துணிந்து நின்று வீரமரணம் அடைந்தனர். ஆனால் எங்கேயும் வீரத்தை விட்டுக்கொடுக்கவில்லை. அனைவரும், உக்ரைனின் வீரர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். உக்ரைனுக்கான உயிரை நீத்த அனைவரும் எப்போதும் நினைவில் வைத்துப் போற்றப்படுவார்கள் என்று கூறினார்.