உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவந்தாலும், முந்தைய அலையை காட்டிலும் தீவிரத்தன்மை குறைவாகவே உள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளான பெரும்பாலான நபர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான தேவை குறைவாகவே காணப்படுகிறது..
இந்நிலையில், அடுத்துக் கண்டறியப்படும் உருமாறிய கரோனாவின் பரவும் தன்மை, தீவிர தன்மை எந்தளவுக்கு இருக்கும் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகில் கரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது. ஆனால், ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் ஒமைக்ரான் முந்தைய கரோனா வகைகளைப் போலத் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
இருப்பினும், அடுத்து வரும் உருமாறிய கரோனாவும் இதேபோல இருக்கும் என்று சொல்ல முடியாது. அது வேகமாகப் பரவி அதேநேரம் தீவிர பாதிப்பையும் ஏற்படுத்தலாம். அடுத்து உருவாகும் கரோனா லேசான பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா என்பது தான் இப்போது நம்முன் இருக்கும் ஒரே கேள்வி.
இதையும் படிக்க | டெல்டா கரோனாவை தடுத்து நிறுத்தும் ஒமைக்ரான்: ஆய்வில் புதிய தகவல்
அடுத்து வரும் காலங்களில் உருமாறும் கரோனா லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்று மக்களிடம் பரவலாகக் கருத்து உள்ளது. இப்படி நடக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
அடுத்துத் தோன்றும் உருமாறிய கரோனா இப்போது நம்மிடம் இருக்கும் கரோனா தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம்.
அது ஒமைக்ரானை விடக் கூட வேகமாகப் பரவலாம். எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரும் பொது இடங்களுக்குச் செல்லும்போது மாஸ்க், தனிமனித இடைவெளி போன்ற கரோனா வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்" என்றார்.