கொழும்பு: இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஜூலை 4ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
அந்நாட்டு கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எரிபொருள்கள் வரவழைக்கப்பட்டு பள்ளிப் பேருந்துகள் இயக்கப்பட்டதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் கழகம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் கையிருப்பை ஆராய்ந்து, மாணவர்களுக்காக பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சுமார் ஒரு மாத காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.