கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற கனவை 39 முறை தொடர் தோல்விக்கு பிறகு, 40வது முயற்சியில் இளைஞர் ஒருவர் சாத்தியப்படுத்தியுள்ளார்.
39 முறை தொடர்ந்து கூகுள் நிறுவனத்திற்கு விண்ணப்பித்து, அனைத்து முயற்சியிலும் தோல்வியடைந்துள்ளார். எனினும் அவரது விடாமுயற்சி 40வது முயற்சியில் கூகுள் நிறுவனத்தில் பணியைப் பெற்றுத்தந்துள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள சான்பிரான்சிஸ்கோ பகுதியில் வசித்து வருபவர் டைலர் கோஹன். இவருக்கு கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருந்து வந்துள்ளது.
அதற்காக கூகுள் நிறுவனத்திற்கு பலமுறை விண்ணப்பித்துள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் சில காரணங்களுக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காலிப் பணியிடங்களுக்காக தொடர்ந்து 39 முறை கூகுள் நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளார். விடாமுயற்சியைக் கைவிடாத டைலருக்கு 40வது முறை முயற்சித்தபோது கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.
இதனால், இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த மின்னஞ்சல் உரையாடல்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் பதிவில் பல முன்னணி நிறுவனங்களால் பணி நிராகரிக்கப்பட்டவர்கள், தங்களது ஆதங்கங்களைத் தெரிவித்து டைலருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி கூகுள் நிறுவனத்தில் முதல்முறையாக விண்ணப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் இரண்டு முறை விண்ணப்பித்துள்ளார். அப்போதும் கூகுள் நிறுவனம் நிராகரித்துள்ளது. எனினும் விடா முயற்சியைக் கைவிடாமல், தொடர்ந்து கூகுள் நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளார். அவரது விடாமுயற்சி கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற கனவை நிஜமாக்கியுள்ளது.