உக்ரைனுக்கு உதவும் வகையில் உலக வங்கி ரூ. 22 ஆயிரம் கோடி ரூபாயை அவசர நிதியுதவியாக வழங்க திட்டமிட்டுள்ளது.
போரில் பாதிக்கப்பட்ட உக்ரைன் மீண்டு வர உதவும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் உலக வங்கி இந்த உதவியை வழங்குகிறது.
உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ், சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டாலினா ஆகியோர் இணைந்து அறிக்கை வாயிலாக நிதியுதவி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, ''உக்ரைனில் போரினால் மனிதர்களுக்கு ஏற்படும் அழிவுகள் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
மனிதர்கள் கொல்லப்படுகின்றனர். பலர் காயமடைந்துள்ளனர். நாட்டை விட்டு வெளியேற மக்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தையே போர் சீரழித்துள்ளது. உக்ரைன் மீண்டு வருவதற்கு உதவும் வகையில் அந்நாட்டு மக்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம்.
உக்ரைனின் கோரிக்கையை ஏற்று அவர்கள் மீண்டு வரும் வகையில் அவசரகால நிதியை வழங்க முடிவு செய்துள்ளோம். உக்ரைன் மக்கள் சராசரி வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து 22 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளோம். ஜூன் மாத இறுதிக்குள் இந்த நிதி முழுவதுமாக உக்ரைனுக்கு வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.