பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பின் காரணமாக குறைந்தபட்சம் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஷியா பிரிவு மசூதியில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் 56 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதை மருத்துவமனை உறுதி செய்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மேற்கே 190 கீமி தொலைவில் அமைந்துள்ளது பெஷாவர் நகரம். கொச்சா ரிசல்டார் என்ற பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பாக குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது சம்பவ இடம் அருகே இருந்த ஜாஹீத் கான் இதுகுறித்து கூறுகையில், "ஒரு நபர் மசூதிக்குள் நுழைவதற்கு முன்பு இரண்டு போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவதை நான் பார்த்தேன். சில வினாடிகளுக்குப் பிறகு ஒரு பெரிய வெடிச்சத்தத்தைக் கேட்டேன்" என்றார்.
இதையும் படிக்க | உக்ரைனில் இந்திய மாணவர் காயம்: அமைச்சர் தகவல்
ராவல்பிண்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றுவரும் நிலையில், இந்த குண்டுவெடிப்பு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு பிரச்னைகள் காரணமாக, கடந்த 25 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்று பயணம் மேற்கொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.