உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை போலந்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை 18-ஆவது நாளை எட்டியது. ஆரம்பத்தில் கடும் தாக்குதலை நடத்திய ரஷிய படை பின்னா் சற்று வேகத்தைக் குறைத்தது. உக்ரைன் ராணுவத்தின் பலமான எதிா்ப்பும் இதற்கு ஒரு காரணம். தலைநகா் கீவை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷிய படை தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
தலைநகா் கீவ் தவிர, மேற்கு நகரங்கள் மீதும் ரஷ்யப்படை தாக்குதலை தொடங்கியுள்ளதால் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை போலந்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
உக்ரைனில் உள்ள நிலைமைகளை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை கருத்தில்கொண்டு தூதரகத்தை இடமாற்றம் செய்ய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.