இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லமாட்டோம் என மகிந்த ராஜபட்சவின் இளைய மகன் நமல் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுடைய போராட்டத்தின் காரணமாக எழுந்த நெருக்கடியால் பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்தார்.
அவருடைய வீட்டிற்கு நேற்று தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து காவலர்கள் உதவியுடன் தப்பித்த ராஜபட்ச, தனது குடும்பத்துடன் வெளிநாடு தப்பித்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தன.
அதனைத் தொடர்ந்து திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் தனி ஹெலிகாப்டர் மூலம் மகிந்த ராஜபட்ச குடும்பத்துடன் தப்பிக்கும் காட்சிகள் வெளியாகின.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடற்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள நமல் ராஜபட்ச, மகிந்த ராஜபட்ச இலங்கையிலிருந்து தப்பிச்செல்லவில்லை. நாங்கள் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லவும் மாட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளார். அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் குடியிருந்த வீட்டை எரித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் யோஷித ராஜபக்ச ஏற்கெனவே வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றது குறிப்பிடத்தக்கது.