திரிகோணமலை: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்திருக்கும் மகிந்த ராஜபட்ச தஞ்சமடைந்த கடற்படை தளம் முன்பு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
பிரதமர் மாளிகையில் தங்கியிருந்த மகிந்த ராஜபட்ச, அங்கிருந்து பாதுகாப்புப் படையினரின் தீவிர பாதுகாப்புடன் வெளியேறினார். தனது பாதுகாப்பைக் கருதி, திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் அவர் தஞ்சமடைந்தார். ஆனால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் போராட்டம் வெடிக்கிறது.
கடற்படை தளத்தை சுற்றிவளைத்த மக்கள், மகிந்த ராஜபட்ச கடற்படைத்தளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இலங்கையின் அதிபராக மகிந்த ராஜபட்சவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபட்ச பதவியில் இருந்து வரும் நிலையிலேயே, பிரதமராக இருந்த மகிந்தவுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மகிந்தவின் வீடு தீக்கிரையான நிலையில், அவரது மூத்த மகனான யோஷித ராஜபட்ச, ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, இளைய மகன் நமல் ராஜபட்ச ஹெலிகாப்டரில் தப்பியோட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மகிந்த ராஜபட்ச தஞ்சம் அடைந்த திரிகோணமலையில் உள்ள கடற்படை தளம் முன்பு மக்கள் போராட்டத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.