இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இலங்கைக்கான இந்திய தூதர் சந்திப்பு மேற்கொண்டார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற வன்முறையையடுத்து பிரதமர் மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க (73) வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். எனினும் அங்கு போராட்டங்கள் தொடர்வதால் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில் நேற்று பிரதமராக பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, இன்று இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே-வை அழைத்துப் பேசியுள்ளார்.
இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளித்து பொருளாதாரத்தை மீட்க பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே முயற்சி எடுக்க உள்ள நிலையில், இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக இந்தியாவின் ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்டதாக இந்திய தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின்போது புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியத் தூதர் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
முன்னதாக இலங்கைக்கு நிதியுதவி, நிவாரணம் வழங்கி வரும் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.